சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரான திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் என அவரது கட்சியான மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தலைவர் கமல் ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அ அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து அந்த 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆகியோர் போட்டியிட்டனர். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர்கள் 6 பேரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட 6 புதிய ராஜ்யசபா எம்.பி.க்களும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் எம்.பி.க்களாக பதவி ஏற்க உள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் 25ந்தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.