சென்னை: தலைநகர் சென்னையில், திருமலா பால் நிறுவன மேலாளர் மர்மமான முறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கொளத்தூர் துணை ஆணையர், பொள்ளாச்சி புகழ் பாண்டியராஜன் அன்றாட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமலா பால்’ நிறுவனத்தில்,ரூ.45 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட, கருவூல மேலாளர் நவீன் பொலினேனி கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாககிடந்தது கண்டறியப்பது. இதை சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சந்தேக மரணம் தொடர்பாக, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
நவீன் பொலினேனி திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னியம்மன்மேட்டில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு- செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் நவீனை நேரில் வரும்படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என போலீஸாரிடம் நவீன் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர மேலும் சிலர் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் நவீன் சடலமாக கிடந்தார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததால், அவரால் எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும் என்றும் கேளவி எழுந்தது.. தகவல் அறிந்து வந்த புழல் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
இதனால், புழல் போலீசார் சந்தேக மரணம் என்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவ இடம் அருகே உள்ள, ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். காமிராவில், அங்கு நவீன் பொலினேனி மட்டும், காரில் இருந்து இறங்குவது பதிவாகி உள்ளது. இவர் தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என, போலீசார் முடிவுக்கு வந்து உள்ளனர்.
எனினும், நவீன் பொலினேனியிடம் கையாடல் தொகையில் பங்கு கேட்டு மிரட்டிய, திருமலா பால் நிறுவன அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடக்கிறது. இந் நிலையில், நவீன் பொலினேனி மீது, திருமலா பால் நிறுவனத்தார் அளித்த புகார் மீது, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜன், விதிகளை மீறி விசாரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், ‘நவீன் மீது கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் நிறுவனம் அளித்த புகாரானது விசாரணைக்காக புழல் உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அவர் மூலமாக மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் விசாரணை தொடங்கப்படவில்லை. அவரை காவல் நிலையம் அழைத்து விசாரிக்கவும் இல்லை. மேலும், கடைசியாக நவீன் அவரது சகோதரி, அவர் பணி செய்த பால் நிறுவனத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதில், காவல்துறையை பற்றி எதுவும் குற்றம்சாட்டவில்லை’ என காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நவீன் மரணம் தொடர்பாக சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் திஷா மித்தல் விசாரணையை தொடங்கி உள்ளார். முதல்கட்டமாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முடியும்வரை அவருக்கான துணை ஆணையர் பணிகள் எதையும் கவனிக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் அவர் காவல் ஆணையர் அலுவலகம் வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நவீன் பொலினேனி மீது, திருமலா பால் நிறுவனத்தார் அளித்த புகார் மீது முறையாக வழக்குப்பதிந்து விசாரிக்காத, மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.