சென்னை: பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல்அறிந்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சர்கள், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் – செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 2 மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள  பதிவில்,  “கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில்,  “கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு: மாணவர்களை பலி கொண்ட கடலூர் பள்ளி வேன்மீது ரயில் மோதி விபத்து! கேட்கீப்பர் கைது…