சென்னை: ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக் முதல் கட்டமாக ரூ.505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெற்ற கோரிக்கை மனுக்களை பரிசீலித்து 100 பாலங்கள் கட்டப்படுகின்றன.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விளைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் குக்கிராமங்களிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை அனைத்து பருவகாலங்களிலும் சென்றடைவதற்கு கிராமச் சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

2025-26ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.” இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு வரப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் 100 பாலங்கள் அமைக்க ரூ. 505 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.