சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் (டைப்ரைட்டிங், சார்ட் ஹேன்ட் மற்றும் அக்கவுண்டன்ட்)  தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் ஜுலை  28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசின்  தொழில்நுட்பக் கல்வித்துறை சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை,     தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள்  நடத்தப்பட்டு வருகின்றன. அதனப்டி, பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த வருடம், ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்காக கடந்த ஜூலை 1ம் தேதி முதல்  விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான கடைசி நாள், ஜுலை  28ம் தேதி. அதற்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இணைய விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஜூலை 30ம் தேதி முதல் ஆக.1ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம்.

புதுமுக இளநிலை, இளநிலை தேர்வுக்கு ரூ.100ம், இடைநிலை தேர்வுக்கு ரூ.120ம், முதுநிலை தேர்வுக்கு ரூ.130ம், உயர் வேகம் தேர்வுக்கு ரூ.200ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.