தைலாபுரம்: பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் ஆதரவாளரான சேலம் எம்எல்ஏ அருளை அன்புமணி பாமகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், ஒருவரை கட்சியில் இருந்து நீக்க பாமக சட்டத்திட்டத்தின்படி, கட்சியின் தலைவரான தான் (அன்புமணி) உள்பட மூன்று பேருக்கு அதிகாரம் உள்ளதாக கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது,,
“அரசு பள்ளிகளில் ஆங்கில திறனை வளர்க்க டெவலப் திட்டத்தினை தமிழக அரசு கொண்டுவந்துள்ளதை பாமக வரவேற்கிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இத்திட்டத்தினை விரிவு படுத்த வேண்டும்.
தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்திற்கு மேல் நெல் விவசாயம் செய்ய கூடும் என்பதால் உரத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. உரதட்டுப்பாட்டினை போக்க விவசாயிகள் முன்னதாகவே உரம் வாங்கி குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
மழை காலம் துவங்க உள்ளதால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் காரணமாக நெடுஞ்சாலை அனைத்துமே தனது அடையாளத்தினை இழந்து இருக்கிறது. குண்டும் குழியுமான சாலைகளை ஒட்டு வேலைகள் செய்யாமல் முழுமையான சாலைகள் அமைக்க வேண்டும்.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இழப்பீடு வழங்க கோரி போராட்டம் செய்து வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு வழங்கபடும் இழப்பீட்டினை விட கூடுதலாக வழங்க வேண்டும்.
பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்கும் போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி இழப்பீடு வழங்க பத்து லட்சம் உத்தரவிட்டும் ஆலை நிர்வாகம் வழங்காமல் உள்ளது. அந்த ஆலை நிர்வாகத்தின் பின்னால் உள்ள நபர் யார்? என்று கேள்வி எழுப்பியதுடன், இழப்பீடு வழங்ககோரி மக்கள் போராட்டம் செய்தபோது மாவட்ட எஸ்.பி எச்சரிக்கிறார். இது தவறான செயல் என்றார்.
மேலும், நகை திருட்டு புகாரில் அஜீத்குமார் கொலை செய்யபட்டதற்கு ஆழ்ந்த வருதத்தை தெரிவிப்பதோடு இழப்பீடாக ஒரு கோடி வழங்க வேண்டும். நிகிதா என்ற பெணின் ஒற்றை தொலைபேசிக்கு அதிகாரிகள் ஓடோடி வந்துள்ளார்கள், அப்படியானால், ஆனி வேர் எங்கிருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர், அஜீத் குமார் கொல்லப்பட்ட விவகாரம் ஊருக்கே தெரிந்த பிறகு மாவட்ட போலீசுக்கு தெரிகிறது சட்டம் ஒழுங்கு தான் என்ன? என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து செய்தியாளர் ஒருவர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்க 3 பேருக்க அதிகாரம் உள்ளதாகவும், கட்சியின் தலைவர், பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் என கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. தனக்கு தான் உள்ளது.
கட்சியின் கொறடாவாக அருள் உள்ளார். அதனால், அவரை நீக்கும் அதிகாரம் ஜி.கே மணி மூலம் சபாநாயகருக்கு கொடுத்து சிபாரிசு செய்து தான் நீக்க வேண்டும். அன்புமணிக்கு நீக்கும் அதிகாரம் கிடையாது. எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு செய்திகள் வருகின்றன. எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நான் நடத்தி வருகிறேன் என்றார்.
சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு நிர்வாக குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்க உள்ளதாகவும், ஒருவரை நீக்க மூன்று பேருக்கு அதிகாரம் உள்ளதாக அன்புமணி தெரிவிக்கும் சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
2026 தேர்தலில் பாமக எந்த அணியுடன் கூட்டணி என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து பாமக நிர்வாக குழு, செயற்குழு, பொதுக்குழு கருத்துகள் கேட்ட பின் தான் சொல்ல முடியும் அதுவரை வரும் தகவல் வதந்திதான் என்று தெரிவித்துள்ளார்.