சென்னை: ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ’நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி குறித்து சிலாகித்து பேசினார்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பயன்பெறும் வகையில் ‘வெற்றி நிச்சயம்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன், “நான் முதல்வன்” திட்டம் மூலம் பயன்பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், இன்றைய தினம், “வெற்றி நிச்சயம்” என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கியது திராவிட மாடல் அரசும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் தான் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் சொல்ல முடியும். உங்களுடைய வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி. உங்கள் முதலமைச்சரின் வெற்றி!
வெற்றியை நோக்கிதான் வாழ்க்கையில் எல்லோரும் செல்கிறோம். மாணவர்களுக்கான வெற்றிப் படிக்கட்டுகளை அமைக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப் பட்டது. மாணவர்களின் வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி. இளைஞர்கள், பெண்களை அறிவில் சிறந்தவர்களாக உருவாக்க உறுதி எடுத்துக் கொண்டேன். மாணவர்கள், இளைஞர்கள்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கை. நான் முதல்வன் திட்டம் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 41 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து நல்ல வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டம் இன்று எல்லோரையும் உயர்த்தியுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தில் படித்து பலருக்கு பெரிய, பெரிய வாய்ப்புகள் வந்துள்ளன. நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியை உண்மையில் நான் வெற்றி பெற்றதை போன்றுதான் உணர்கிறேன். மாணவர்கள், இளைஞர்களின் வெற்றி என்னுடைய வெற்றி போன்றது. நான் முதல்வன் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். 2023ம் ஆண்டு நான் முதல்வன் போட்டி பிரிவுகளை தொடங்கினோம். இவ்வாண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள். யுபிஎஸ்சி தேர்வில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
யுபிஎஸ்சி மட்டுமல்ல எஸ்எஸ்சி தேர்விலும் 58 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாடு என்றால் சிறந்த கல்வித்தரம், சிறந்த பயிற்சி, எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்கிற உயர்கல்வி. கடந்த ஆண்டு நடந்த இந்திய திறன் போட்டியில் தமிழ்நாட்டினர் 87 பேர் 6 தங்கம், 8 வெள்ளி உள்பட 40 பதக்கங்கள் பெற்று 3வது இடம் பெற்றனர். பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம், அந்த வரிசையில் வெற்றி நிச்சயம் திட்டம் தொடங்கப்பட்டது.
வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் நிறுவனங்களுடன் இணைந்து 18-35 வயது வரை வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வெற்றி நிச்சயம் திட்டத்தில் சேர செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் சேர தனி செயலி உருவாக்கி இருக்கிறோம், எந்த நிறுவனத்தில் வேலை, அதற்கு என்ன பயிற்சி என்ற விவரம் அந்த செயலியில் இருக்கும்.
இவ்வாறு கூறினார்.