சமீபத்தில் அன்புமணி சேலம் சென்றபோது, அப்போது சேலம் மேற்கு மாவட்ட எம்எல்ஏ அருள் பங்கேற்கவில்லை. திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சேலம் பொதுக்குழு கூட்டத்தில், எம்எல்ஏ-க்கள் மீண்டும் நல்ல உடல்நலம் பெற்று வீடு திரும்ப அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று கூறினார். இதனால் நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. அன்புமணியை தவிர்க்கவே அருள் அவ்வாறு செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அன்புமணி கூட்டத்தின்போது, மேடையிலேயே, அவர் உடல் நலம் தேற பிரார்த்திப்பதாக கூறி பிரார்த்தனை நடத்தியதும், சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருள், இறந்தவர்களுக்கு தான் கூட்டுப் பிரார்த்தனை செய்வார்கள், நான் இன்னும் சாகவில்லை என்று பாமக எம்எல்ஏ அருள், அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாமகவில் ராமதாஸ் சொல்வதே தங்களின் முடிவு என்று அருள் கூறிய நிலையில், அவருக்கு இணை பொதுச் செயலாளர் பொறுப்பு அளித்து ராமதாஸ் அறிவித்திருந்தார்.

இதையடுத்து அன்புமணிக்கும், அருளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏவும், பாமக இணை பொது செயலாளருமான அருள், நேற்று  சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  இந்த நாட்டை ஆண்ட முன்னாள், இன்னாள் முதல்வர்கள், பிரதமர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள், ராமதாசை பற்றி எல்லாம் சொல்லாத, சொல்ல தயங்கிய வார்த்தை களை, இன்று அன்புமணி சொல்லி இருப்பது எங்களுக்கு உச்சக்கட்ட மனவேதனையை அளித்துள்ளது.

ராமதாஸ் அய்யாவாக இல்லை. குழந்தை போல் மாறிவிட்டார்.3 தீயசக்திகள் ராமதாசை ஆட்டி வைக்கிறார்கள் என்று அன்புமணி சொல்கிறார். பொறுப்பாளர் களாக கொலைகாரன், கொள்ளைக்காரன், ரோட்டில் இலந்தை பழத்தை விற்பவர்களை எல்லாம் கொண்டு வந்து நியமனம் செய்கிறார்கள். அனைத்து அதிகாரமும் எனக்கே என்று கூறுகிறார்.

செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்டவர்களுக்கு ராமதாஸ் மீது என்ன அக்கறை? என்பது உள்பட இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சொல்லி இருக்கிறார். ராமதாஸ் என்கிற அந்த குழந்தை தான், மூன்று வருடத்திற்கு முன்பு உங்களை தலைவராக நியமித்தது. அதுமட்டும் எப்படி செல்லும். நான் ராமதாசுடன் 36 ஆண்டாக பயணிக்கிறேன். ராமதாசுக்கு இழிவு ஏற்படும்போது, என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.

தெருவில் இலந்தை பழம் விற்பவன் கேவலமானவனா? அவனும் ஒரு பட்டாளி தான். அன்புமணி பாட்டாளி வர்த்தகத்தை அவமானப்படுத்துகிறார். வன்னியர் சங்கத்தை 1980ம் ஆண்டு ராமதாஸ் தொடங்கிய போது, அன்புமணிக்கு 12 வயதுதான். பாமக என்ற இயக்கத்தை தொடங்கும்போது அவருக்கு 21 வயது. மற்ற கட்சிகளை போல், பாமகவுக்கு தாய் இயக்கம் கிடையாது. ராமதாஸ் தான் தாய். ராமதாஸ் சுயம்புவாக பெற்று எடுத்த குழந்தை தான் பாமக.

பாமக தலைவராக ஜி.கே.மணி 25ஆண்டுகளாக இருந்தார். பின்னர், அன்புமணியை பாமக தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் கூறியபோது, அதை புன்னகை யோடு முன்மொழிந்தவர் ஜி.கே.மணி. ஆனால், இன்று அவர் படுகிற அவமானம் ஏராளம். ராமதாசுடன் யார், யார் இணைகிறார்களோ, அவர்களை முகநூலில் தாக்குவதற்காக ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. இன்றைக்கு ராமதாஸ்தான் தலைவர். அதற்கு அடுத்தபடியாக நீங்கள்தான் தலைவர்.

நாங்கள் ராமதாசை பார்த்து அரசியலுக்கு வந்தோம். நேற்று வரை நாங்கள் நல்லவர்கள். இன்றைக்கு கெட்டவர்களா?. ஓட்டு போடும் வன்னிய மக்களும், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள், ராமதாஸ் பின்னால் தானே இருக்கிறார்கள். வாக்காளர்கள் இல்லாமல் நிர்வாகிகளை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும்?. அன்புமணியை மன்றாடி கேட்டுகொள்கிறோம். தயவு செய்து பத்து நாட்களுக்கு உங்களிடம் இருக்கும் ஆட்களை எல்லாம் விட்டு விட்டு, நீங்கள் சுயமாக சிந்தியுங்கள்.

தைலாபுரம் வந்து ராமதாசை சந்திக்க வேண்டும். அவரிடம் பேசி விட்டு, அங்கு ஒரு ேபட்டி கொடுக்க வேண்டும். பாமக தலைவர்களாக இருந்த பேராசிரியர் தீரன், ஜி.கே.மணி ஆகியோர் ராமதாசுக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். இப்போது, நிறுவனருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று புதியதாக விதி எழுதப்படுகிறது. அது தவறாகும். இந்த பிரச்னை தந்தை, மகன் பிரச்னை அல்ல. கட்சியின் நிர்வாக பிரச்னையாகும். கட்சியின் நிர்வாக தலைமை ராமதாஸ் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. பாஜ கூட்டணியை அன்புமணி தான் முடிவு செய்தார். இறுதி நேரத்தில் ராமதாஸ் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதை தடுக்க முடியாமல் அவர் ஏற்றுக்கொண்டார். இதுதான் உண்மையாகும் என தெரிவித்திருந்தார்.