சென்னை: அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டம் 2016ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வை திறன் உடையவர்களுக்கு பதவி உயர்வில் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒலியை உணரும் திறன் பெற்றவர்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர் – சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகர்த்துவோர், ஆட்டிசம் -அறிவுத்திறன் குறைபாடு-கற்றலில் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உடையோரை மாற்றுத்திறனாளிகளாக கருதி பதவி உயர்வுக்கு அவர்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து எந்தெந்த பதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்த மானதாக இருக்கும் என்பதை தெரிவிக்கப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளி ஊழியர் ஏற்கனவே பதவி உயர்வுக்கான தகுதிகளை பெற்று அதற்கான பட்டியலில் இடம்பெற்றிருப்பின், குறிப்பிட்ட அந்த வேலை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்படவில்லை என்றால் கூட அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இதை கண்காணிக்க மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலர்கள் நோடல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நோடல் அதிகாரிகள் இது தொடர்பான அறிக்கையை ஒருங்கிணைப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.