சென்னை: போதை கும்பல் பெண்களிடம் தகாத முறையில் சேட்டை செய்வதாகவும், இரவில் அடிதடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டி உள்ள பவானி பகுதி பொதுமக்கள், அந்த போதை கும்பல்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி மேற்கு தெரு பகுதியில் இரு டீனேஜ் சிறுவர்களும் ஒரே பெண்ணை காதலிப்பது தொடர்பாக, இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனை தாக்கி உள்ளான். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பர்கள் என பலர் போதையுடன் ஒரு கும்பலாக வந்து, அந்த இளம்பெண்ணை மிரட்டியதுடன், அங்கிருந்த பொதுமக்கள்ளை மிரட்டி உள்ளனர். இதைடுத்து அங்கிருந்த பட்டாபிராம், யுவராஜ், ராஜேந்திரன் ஆகியோர் அவர்களை அங்கிருந்து செல்ல அறிவுறுத்திய நிலையில், அந்த கும்பல் அவர்களை தாக்கி உள்ளனர். இந்த சமயத்தில் அந்த கும்பல் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பொதுமக்கள் உடனடியாக பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தன்ர். ஆனால், போலீசார் யாரும் அங்கு வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பவானி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதோடு, முற்றுகையிட்டு திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பவானி டிஎஸ்பி ரத்தினகுமார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கு தெரு பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள், பள்ளி மாணவிகள் நடமாட முடியாத நிலை உள்ளது. அப்பகுதியை சேர்ந்த போதை வாலிபர்கள் பைக்கில் அதிவேகமாக செல்வது, பெண்களை கிண்டல் செய்வது என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்டிக்கும் பெண்களை வயதானவர்கள் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசுகின்றனர். மேலும், குடிபோதையில் தெருக்களின் முனையில் நின்று கொண்டு இரவு நேரங்களில் வீடுகளின் மீது சரமாரியாக கற்களை வீசுகின்றனர். எனவே, பொது அமைதிக்கு கேடு விளைவிப்போர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து, இந்த வி வகாரம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியது.