சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக  வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு செல்வதால்,   இன்று ரயில் மூலம் காட்பாடிக்கு செல்கிறார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக வேலூர் மற்றும் காட்பாடு மாவட்டங்களில் ஆய்வு மற்றும் பயனர் திட்டங்கள் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதற்காக அவர் இன்று  (ஜூன் 25) காலை 10.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சாய்நகர் சீரடி எக்ஸ்பிரஸ் ரயில் (SNSI) மூலம் காட்பாடிக்கு புறப்படுகிறார். இந்த ரயில்  மதியம் 12.45 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.

காட்பாடியில்,  காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் துரைமுரகன்  சார்பில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக  வரவேற்பு அளிக்கின்றனர். அதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக செல்லும் அவருக்கு வேலூர் கிரீன் சர்க்கிள் புதிய பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் மதியம் 1 மணிக்கு வேலூர் மாவட்டத்தில், 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து  வேலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு மதிய உணவு அருந்திவிட்டு, ஓய்வெடுக்க உள்ளார்.

மீண்டும் மாலை 5 மணியளவில் விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்படும் முதலமைச்சர்,  அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தையும், கருணாநிதி திருவுருவச் சிலையையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து,. மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு  சாலை வழியாக திருப்பத்தூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அங்கு  நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் திறந்து வைக்கிறார். பிறகு இரவு  திருப்பத்தூர் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

நாளை(ஜூன் 26)  திருப்பத்தூரில் நடைபெறும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி,  வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுள்ளது. தடையைமீறி டி ரோன் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.