மதுரை; கணவரை பிரிந்தும், இரு குழந்தைகளை விட்டுவிட்டும்  கள்ளக்காதலனுடன்  மகள் சென்றதால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் மற்றும் அவரின் தாயார் மற்றும் மகளின் இரு குழந்தைகளுடன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  தற்கொலை செய்துகொண்டனர்.  இந்த சோக சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரங்கேறி உள்ளது.

இரண்டு குழந்தைகளை பெற்ற மகள், திருமணம் மீறிய உறவு காரணமாக மற்றொருவருடன் வீட்டை விட்டு ஓடி போனதால் அவமானம் அடைந்த மூதாட்டிகள் இருவர், தங்களது இரு பேத்திகளை கொன்று தாங்களும்  தற்கொலை செய்து கொண்டனர். இது அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி செளந்தரபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பவிதார். இவர்களுக்கு லித்திஸ்கா (வயது 7), தீப்தி (5) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கருத்து வேறு பாடு ஏற்பட்டது.  இதனால் அங்கிருந்து கோபித்துக்கொண்டு வந்த பவித்ரா  தனது இரு பெண் குழந்தைகளுடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டியில் உள்ள தனது தாய் காளீஸ்வரி வீட்டில்  வசித்து வந்தார்.

இதற்கிடையில்,  கரூர் மாவட்டத்தில் கணவருடன் குடும்பம் நடத்தியபோது, அங்குள்ள  பள்ளப்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவருடன் பவித்ராவுக்கு கள்ளத்தொடர்பு  ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.  அவரது தாய் ஆகியோர் கண்டித்து வந்தனர். ஆனால், பவித்ரா அதனை பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. இவர்களின் கள்ள உறவு ஒட்டன்சத்திரம் வரை தொடர்ந்துள்ளது. இதையடுத்து,  பவித்ரா நேற்று தனது இரு குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு, பள்ளப்பட்டி   பெயிண்டருடன் வீட்டை விட்டு  சென்று விட்டதாக  கூறப்படுகிறது.

இதனால் அவமானம் அடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி (45), அவரது தாய் செல்லம்மாள் (65) ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவெடுத்தனர். தாங்கள் மட்டும் இறந்தால் குழந்தைகள் அனாதைகளாகிவிடுமே என்ற அச்சத்தை, அந்த குழந்தைகளை கொன்றுவிட்டு, தாங்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து,  பவித்ராவின் இரு குழந்தைகளான லித்திஸ்கா, தீப்திக்கு விஷம் கலந்த உணவு கொடுத்து இருவரையும் கொலை செய்ததுடன்,  செல்லமாளும், அவரது மகள் காளீஸ்வரியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வீட்டில் உள்ள குழந்தைகள் வெளியே வரவில்லையே, பெயம்மாளையும் வெளியே காணவில்லை என அக்கம் பக்கம் உள்ளவர்கள், வீட்டின் கதவை தட்டி பார்த்தபோதுதான் மூதாட்டிகள் இருவரும் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து உடனே அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து  வந்த  இடையகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சடலங்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.