சென்னை: சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் சமீப நாட்களில் அடுத்தடுத்து மூன்று முறை விமானங்கள் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இது பயங்கரவாதிகளின் திட்டமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. மேலும், விமானம் தரையிறங்கும்போது லேசர் ஒளியை செலுத்தினால் விமானிக்கு பாதிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலையமும் இந்திய விமான நிலைய ஆணையமும் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “இத்தகைய சம்பவங்களால் விமானப் பயணத் துறைக்குப் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இத்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் இந்த விவகாரத்தைக் கடுமையானதாக எடுத்துக்கொள்கின்றனர்,” என்றன.
விமானிகளிடமிருந்தும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், லேசர் ஒளி வீச்சின் மூலத்தைக் கண்காணித்து குற்றம் புரிந்தோருக்கு எதிராக தமிழ்நாட்டுக் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டது.
“இச்சம்பவங்களை மிகைப்படுத்தி பீதியைக் கிளப்பியோர் கூறியதற்கு மாறாக, விமானிகள் நிதானத்துடனும் முழுக் கட்டுப்பாட்டுடனும் செயல்பட்டு நிலவரத்தைக் கையாண்டனர். சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டதுபோல அவசரநிலை எதுவும் இல்லை,” என்று சென்னை விமான நிலையம் கூறியது.
லேசர் ஒளி எங்கிருந்து வீசப்பட்டது என்பது குறித்து துல்லியமாகத் தகவலறிய விமானிகளுடன் இந்திய விமான நிலைய ஆணையம் ஒருங்கிணைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விமானங்கள் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கடந்த 15 நாட்களில் மூன்று முறை விமானங் களின் மீது 3 முறை லேசர் ஒளி அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையம் அருகே லேசர் ஒளி பயன்படுத்தவும், பலூன்களை பறக்கவிடவும் காவல்துறை தடை விதித்துள்ளது. மீறி லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.