துரை

துரையில் நடைபெற உள்ள முருக பக்தரக்ள் மாநாட்டு திடலில் அறுபடை வீடு மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இந்து முன்னணி சார்பில்) பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநாடு நடைபெறும் தினத்தில் காவடி, பால்குடம், தேர் இழுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்று மாலை 6 மணி அளவில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் படித்து கின்னஸ் சாதனையும் படைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும்  இந்த மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோபுர முகப்பும், உள்ளே சென்றால் கோவில் பிரகாரம் போன்றும், தனி சன்னதிகளில் வேல்களுடன், அறுபடை வீடு மூலவர்களை தத்ரூபமாக வடிவமைத்து பக்தர்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முருகன் சிலைகளுக்கு, வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாடு மாநாடு நடைபெறும் 22-ந்தேதி இரவு வரை இருக்கும் எனவும், பொதுமக்கள் அனைவரும் அறுபடை வீடுகளின் மாதிரியை பார்வையிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.