சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிப்பு பணி நடைபெற்று வருவதால்எ செந்தூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் சில ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எழும்பூரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும். இந்த ரெயில் சென்னை பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
இதே போல, புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.
வருகிற 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை சென்னை எழும்பூருக்கு வரும்
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16102),
மதுரை தேஜஸ் ரெயில் (22672),
மன்னார்குடி மன்னை ரெயில் (16108),
செந்தூர் அதிவிரைவு ரெயில் (20606),
குருவாயூர் ரெயில் (16128) ஆகிய ரெயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, 20-ந் தேதி முதல் ஆகஸ்டு 18-ந் தேதி வரை எழும்பூரிலிருந்து கொல்லம் (16101), மதுரை (22671), மன்னார்குடி (16107), திருச்செந்தூர் (20605) மற்றும் குருவாயூருக்கு (16128) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.