மதுரை:  பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்- தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா தற்போது மதுரையில் கபட வேடம் தரிக்கிறார என திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி  விமர்சித்து உள்ளார்.

தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்று வரும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில்  உள்துறை மந்திரி அமித்ஷா  கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,   பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மதுரையின் சொக்கநாதர், கள்ளழகர், முருகனையும் வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். மதுரை மண் மாற்றத்திற்கான மண். ஜூன் 22-ம் தேதி முருகன் மாநாட்டை இந்த மண்ணில் சிறப்பாக நடத்தி காட்ட வேண்டும். என்னுடைய கண்ணும், காதும் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன.

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று, பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். அமித்ஷாவால் தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் சொல்லுகிறார். அமித்ஷாவால் முடியாமல் இருக்கலாம். நாட்டு மக்கள் உங்களை தோற்கடிக்க தயாராக உள்ளனர். தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் மாற்றத்தை மதுரை உண்டாக்கும். தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள்.

பஹல்காமில் மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். மக்களை கொன்றோரை முப்படையின் உதவியோடு மோடி அழித்தார். ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்திலிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. மறுபடியும் பயங்கரவாதிகள் வாலாட்டினால் அழிக்கப்படுவார் என்பதை நினைவூட்டுகிறேன்.

2024ல் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார்.  ஒடிசா, அரியானாவிலும் வென்றோம். மராட்டியத்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு பா.ஜ.க. வெற்றியை பதிவு செய்திருக் கிறது. டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களால் தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வருக்கு இதைப் பற்றி எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது. ஊழலால் மட்டுமல்ல, சாராயத்தாலும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூறினார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தரிவத்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் அஜண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ’ஒரே ஆள் ஒரே பேச்சு’ என ரீதியில் பேசி வருகிறார். ’’தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது’’ எனச் சொல்லியிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் கோவைக்கு வந்த போது இதே டயலாக்கைதான் பேசினார். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுந்தோல் போர்த்திய புலி.

’’ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரும்’’ எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலைத் தமிழர்கள் எப்படி மறப்பார்கள்?

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை பாஜகவினர் எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள்? ’’தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?’’ என 2024 மே மாதம் அமித்ஷா சீறினார். இப்போது தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார்.

‘’ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் இருக்க வேண்டிய புதையல் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது’’ எனச் சொல்லி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா.

அது மட்டுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை போல ஒருவரைச் சித்தரித்து, தமிழர் வேட்டி சட்டை அணிவித்து, வாழை இலையில் பழைய சோறு வைப்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வீடியோ வெளியிட்டு தமிழர்களைக் கேவலப்படுத்தியது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் ஒடிசாவிலேயே இருக்கிறது.

ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது போலத் தமிழ்நாட்டைப் பிடிப்பார்களாம். ஒடிசாவின் லட்சணம்தான் இந்தியாவுக்கே தெரியுமே! ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்று 2024 ஜூன் 12-ம் தேதி ஆட்சியைப் பிடித்தது. 2024 டிசம்பர் வரையிலான ஐந்தே மாதத்தில் மட்டும் ஒடிசாவில் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 41 கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்பட 509 பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக 9 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 509 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. அந்த ஒடிசாவின் ஆட்சியைத்தான் தமிழ்நாட்டுக்குத் தரப் போகிறார்களா?

பாஜக ஆட்சி எப்படி இருக்கும்? என்பதை மணிப்பூரில் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! மணிப்பூர் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட மத வழிப்பாட்டு தளங்கள் அழிக்கப்பட்டன. 70,000 பேர் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தனர். இணையச் சேவைகள், முடக்கம், ஊரடங்கு உத்தரவு , பாலியல் கொடுமைகள், கண்டதும் சுட உத்தரவு என மணிப்பூர் முடங்கிப் போனது. மணிப்பூர் பெண்களின் கற்புக்கே சவால் விட்டார்கள். கலவரத்தை பாஜக அரசு வேடிக்கை பார்த்தது. ஆனால், பிரதமர் மோடியும் அமைச்சர் அமித்ஷாவும் மணிப்பூர் அரசைப் பதவி நீக்கம் செய்யாமல், ’’முதல்வர் பிரேன் சிங் அமைதியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார்’’ என சர்டிபிகேட்தான் கொடுத்தார்கள். மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்த பிறகும் கூட வன்முறை வெறியாட்டம் நிற்கவில்லை. இன்றைக்கும் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதளச் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத பாஜக, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.

திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் மூலம் எங்களுடைய முதலமைச்சர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று விட்டார். பத்து ஆண்டுகளாகச் சீரழிந்து கிடந்த தமிழ்நாட்டை வளமானதாக்கி தலை நிமிர வைத்துள்ளார். நான்காண்டுகள் அடிமை ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிச்சாமியால் இப்படி ஓர் ஆட்சியைக் கற்பனையிலும் தர இயலாது.

அதிமுக என்னும் கட்சியை மிரட்டியே விழுங்கிக் கொண்டிருக்கும் அமித்ஷா, கூட்டணி அமைத்த அன்றே தனக்கு அடிமைதான் எடப்பாடி பழனிச்சாமி என்பதை உலகத்துக்கே காட்டினார். இன்று திமுக ஆட்சி மீது அவதூறு பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார்.

அமித்ஷாவுக்கு 2021 சட்டமன்றத் தேர்தல் மறந்து விட்டது போலும். பாஜகவின் அண்ணாமலையே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பயன்படுத்தித்தான் பிரசாரம் செய்தார். மோடியின் பெயரைக் கூட போடாமல் விளம்பரம் செய்த பாஜகவினர் கதைகள் நிறைய இருக்கிறது. பாஜக தலைவர்கள் தயவு செய்து பிரசாரத்துக்கு வந்துவிட வேண்டாம் என்று அதிமுகவின் வேட்பாளர்கள் கெஞ்சும் அளவுக்கு பாஜக மீதான வெறுப்பு தமிழ்நாட்டில் நிலவியது.

அந்த வெறுப்பு அடங்கவில்லை என்பதைத்தான் அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் காட்டியது. தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக மீது அது இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதும் தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையை மறுப்பதும் தங்களுக்கு வாக்களிக்காத தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்குவதற்காக பாஜக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பாஜக மீது தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும் அவருக்கும் துணை போகிறவர்களுக்கும் சரியான தீர்ப்பைத் தமிழர்கள் எழுதுவார்கள்.

இதெல்லாம் உளவுத் துறை மூலம் அமித்ஷாவுக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும். தேர்தலில் வெல்வது அல்ல அவர்களின் நோக்கம். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைக் கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு. அதற்காக 2026 சட்டமன்றத் தேர்தலைப் பயன்படுத்துகிறார்கள்.

அமித்ஷா தொடங்கியுள்ள இந்தப் பிரசாரம் எங்களுக்கு மிகவும் வசதியானதுதான். ஏற்கெனவே சொன்னது போல ஆளுநர்தான் எங்களை வெற்றி பெற வைக்க போகிறார் என்று நினைத்தோம். ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட்டு விட்டதால் அந்தப் பணியைத் தற்போது அமித்ஷா கையில் எடுத்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றிகள்.

’2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி வெற்றிபெறும்” என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து இப்படிப் பேசுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதையே பேசினார். 2019, 2024 மக்களவைத் தேர்தல்களின் போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று பேசினார். அவர் பேசியது எதுவுமே கடந்த காலங்களில் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான நாளில் இருந்தே தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தொண்டர்களின் நம்பிக்கையையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படிப் பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை “ஷா” கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது.

2018-ம் ஆண்டு தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தித் தொடங்கிய திமுக தலைமையிலான கூட்டணி 13 தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திமுக கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும்”.

இவ்வாறு கூறி உள்ளார்