சென்னை: தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்கும்  “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ என்ற  புதிய மருத்துவ திட்டத்துக்கு ரூ12.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மாநிலம் மழுவதும் 862 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், அரசு சார்பில்,  பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, முழு உடல் பரிசோதனைக்காக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்னும் சில நாட்களில் கொண்டுவரப்பட இருப்பதாக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  “நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் செயல்படுத்திட நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில், அவ்வபோது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில்,  அந்த மருத்துவ முகாம்கள்  “நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் இணைஒக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,   2025 முதல் பிப்ரவரி  முதல்,  மார்ச் 2026 வரை 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும்,  ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள். பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அதில் இருந்த அம்மா என்ற பெயர் எடுக்கப்பட்டு முழு உடல் பரிசோதனை திட்டம் என அறிவிக்கப்பட்டது. தற்போது, அந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’  என்ற பெயரில் முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.