சென்னை: தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தவெக சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கட்சியான தவெகவில் இடம்பெற்றுள்ள யானை படமானது, பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என கூறி, அதற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தவெக சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில்,  “தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை”  என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார்.  மனுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள இரட்டை யானை சின்னமானது பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக உள்ளது. அதனால், அந்த  சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,  தவெக கொடியை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இநத் மனுவை விசாரித்த நீதிமன்றம், இதற்கு பதில் அளிக்க தவெகவுக்கு உத்தரவிட்டது.  இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  ஜுன் 4ந்தேதி அன்று  பதில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில்,“பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. தவெகவின் கொள்கை, கோட்பாடு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டு கட்சியின் கொடி உருவாக்கப்பட்டது. தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல என்றும் தமிழகத்தின் கலாச்சார பெருமை, வரலாற்று பெருமை மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையுடன் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆகையால் , பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மனுவை உச்சபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்”.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தவெகவின் யானை சின்னம் தொடர்பான பிஎஸ்பி வழக்கு! ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!