சென்னை: தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற “அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக் கூடாது” என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வனத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்படபல மாவட்ட மக்களின் குலதெய்வமாக சொரிமுத்து அய்யனார் உள்ளார். இதனால், அந்த கோவிலுக்கு உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்களும் செல்வது வழக்கம். முன்னதாக அருகே உள்ள அகஸ்தியர் அருவியில் குளித்துவிட்டு, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று வணங்கி வருகின்றனர். இந்த கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி, வனத்துறை சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கும் கோவிலுக்கு செல்வதற்கும், அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்’ என்ற பெயரில் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க கோயில் உள்ளது. இந்த பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கே அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் பொதுமக்கள், பக்தர்கள் என பலரும் வந்து குளித்து செல்கின்றனர்.
மேலும் இந்த பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நுழைவு கட்டணம் உள்ளூர் மக்களிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தமிழ்நாடு வனத்துறை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக பணம் வசூலிக்கப்படுகிறது. அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பணம் வசூல் செய்வது பேரூராட்சி, நகராட்சி அல்லது பஞ்சாயத்து ஆகியோர் மட்டுமே செய்ய வேண்டும்.
ஆனால், வனத்துறை அலுவலர்கள் இணைந்து பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும் நுழைவு கட்டணம் என்பது உள்ளூர் பொதுமக்களிடமும் வசூலிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அகஸ்தியர் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கும், உள்ளூர் பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டனர்.