செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு நடந்து வருகிறது.
புதிய கல்லூரி துவங்க கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் புதிதாக கட்டிடம் அமைக்கும் வரை தற்காலிகமாக இந்த ஆண்டு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் நடைபெற உள்ளது.
இந்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி, தமிழ் வழி என, மொத்தம் 5 பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு 9,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், தரவரிசை வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை துவக்கப் பட்டுள்ளது.
சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், மதுராந்தகம் ஹிந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவருக்கு, தேசிய மாணவர் படை பிரிவின் கீழ், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாவதாக இடம் வழங்கப்பட்டது.
பொது பிரிவினருக்காக 6ம் தேதி பி.எஸ்சி., பாடப் பிரிவிற்கும், 9, 10ம் தேதிகளில் பி.காம்., மற்றும் பி.பி.ஏ., பாடப் பிரிவிற்கும் 11, 12ம் தேதிகளில் பி.ஏ., பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வுகள் நடக்க உள்ளன.