சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்
இந்த நிலையில், மறைந்த கருணாநிதியின் மகனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் மு.கருணாநிதியின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிகள்! ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து – இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய மு.கருணாநதியின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!” என குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் வீட்டில் உள்ள அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்துமரியாதை செய்தார். தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்துவி மரியாதை செய்தார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மு. கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.