சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பு கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டு உள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பொன்வசந்த் திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதனால் மதுரை திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. . இதையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மே 31-ஆம் தேதி விமானம் மூலம் மதுரை வருகிறாா். அப்போது, மதுரை விமான நிலையம் முதல் மதுரை புது சிறைச்சாலை சாலை வரை அவா் வாகனப் பேரணி மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றன.
இந்த வாகன பேரணியின்போது, பொதுமக்கள், தொண்டா்களைச் சந்திக்கிறாா். மேலும் வாகன பேரணி செல்லும் வழியான, பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், குரு திரையரங்கம், காளவாசல், திருமலைநாயக்கா் சிலை பகுதியில் அவருக்கு வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து மதுரை சென்றடையும் முதல்வர் ஸ்டாலின், ‘ அங்கு, மதுரை மாநகராட்சியின் முதல் மேயரும், திமுகவின் மூத்த முன்னோடியுமான மறைந்த முத்துவின் புதிய வெண்கலச் சிலையை முதல்வா் திறந்து வைக்கிறாா்.
முதல்வர் வருகையொட்டி, மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் கடந்த 23 ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் மேயர் இந்திராணி கலந்துகொள்ளாமல், தன்னிச்சையாக, மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை நடத்தினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மேயர் கூட்டிய மாமன்ற கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். ஆனால், கண்டுகொள்ளாத மேயர் இந்திராணி, அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி பல்வேற தீர்மானங்களை நிறைவேற்றினார். மேயர். மேயரின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் அவரது கணவர் பொன்வசந்த் இருந்து செயல்பட்டதாக புகார்கள் எழுந்தது.
மேலும், அரசு பணிகளில் பொன் வசந்த் தலையிடுவதாகவும், மாநகராட்சி டெண்டர் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை மாநகர் 57 ஆவது வார்டை சேர்ந்த பொன் வசந்த் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் பொன்வசந்த் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.