சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்  வரும்  30ம் தேதி வரை அதீத மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

கேரளாவுக்கு பெரும் மழையை கொடுக்கும்  தென்மேற்கு பருவமழை, தமிழ்நாட்டிலும் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி மே  24-ந்தேதி  தென்மேற்கு பருவ மழை தொடங்கி தென் இந்தியா முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில்,    வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் கோவை, நீலகிரி, கொடைக்கானல் உள்பட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. மேலும் தென்மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில்  நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

தற்போது,  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது  என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் தேனி மாவட்டத்தில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.

குறிப்பாக நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதேபோல கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது.  இந்நிலையில், நேற்று முன்தினம் ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று அதிகாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இது மெல்ல வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேற்கண்ட இந்த நிகழ்வின் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நேற்று பெய்தது.

இதையடுத்து, இன்றும் நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமுதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தமிழக கடலோரப் பகுதிகளை பொறுத்தவரையில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடாப் பகுதி, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்.

வங்கக் கடலில் அனேக பகுதிகளிலும், அதை ஒட்டிய தென் வங்கக் கடல் மற்றும் வடகிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்திலும், ஆந்திர கடலோரப் பகுதிகள், இதர தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு 31ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.