சென்னை: சட்டநீதியையும் – பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளியான ஞானசேகரன் மீதான தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மகிளா நீதிமன நீதிபதி ராஜலெட்சுமி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
“சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும், மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!.
காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.
குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம்.
சட்டநீதியையும் – பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்!”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
#யார்_அந்த_SIR ? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்