சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை உள்பட பல்வேற வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், பள்ளிகளுக்கு ஆண்டிறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையடுத்து, மீண்டும் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஜூன் 2ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

பொதுவாக கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கத்தை பொறுப்பு பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கும். ஆனால், நடப்பாண்டு எதிர்பார்த்த அளவுக்கு வெயில் இல்லாத நிலையில், அவ்வப்போது மழை பெய்வதால், சென்னை உள்பட பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது.
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ள்ளிக்கல்வித்துறை அவிவித்து உள்ளது. திட்டமிட்டபடி ஜூன் 2ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அதனை உறுதி செய்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், ஜூன் 2ம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்:
பள்ளித் தூய்மைப் பணிகள்: பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை. ஆய்வகம், கழிப்பறைகள் உட்பட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைபடுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளிலுள்ள தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்ய வேண்டும்.
பள்ளிக் கட்டடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை குறித்தும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாகச் சீர் செய்யப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும்.
மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தூய்மை யாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும் சமையல் பாத்திரங்கள் முறையாகக் கழுவப்பட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்திடல் வேண்டும்.
பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அப்புறப்படுத்துதல் அவசியம். இவைகளை விதிகளின்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தினை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி இல்லா வளாகமாக (Plastic Free School) மாற்றத்தக்க வகையில் செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.
திறந்தவெளிக் கிணறுகள் இருப்பின் அதன் மேற்பரப்பினை யாரும் அணுகா வண்ணம் மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்நடவடிக்கைகளை நிறைவு செய்யப்பட வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றித் தூய்மை செய்யப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்
பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும்
பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பாதுகாப்பாகப் பயில தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தினுள் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழுப் பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்றிட வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச் சுவர் ஏதேனும் இருப்பின், அத்தகைய கட்டடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவகையில் போதுமான அளவில் சோப்பு / சோப்புக் கரைசல் வைக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து மின் சாதனங்கள் மற்றும் மின் சுவிட்சுகள் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்திடல் வேண்டும்.
பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதுடன் மரங்கள் எளிதில் விழாத வண்ணம் உள்ளதை உறுதிப்படுத்திட வேண்டும்.
அரசாணை எண்.81, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள்.15.03.2024, இன்படியும் மாணவர் சேர்க்கை மார்ச் 1 ம் தேதி முதல் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றிடவும், தேவையான நடவடிக்கையை பள்ளித் தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கொண்டாட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே நடத்தப்படவேண்டும்.
குறிப்பாக தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை முழுமையாக உள்ளதை உறுதி செய்திட ஆசிரியர்கள் முழுமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுடைய அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்திடல் அவசியம்.
8 ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 9ஆம் வகுப்பு சேர்வதை உறுதி செய்திட வேண்டும்.
அரசாணை (நிலை) எண் 113 பள்ளிக் கல்வித் (பக5(1) துறை நாள் 15.05.2025 இன்படி பள்ளியின் சிறந்த செயல்பாடுகளைப் பள்ளிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளம்பரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு நலத்திட்டங் களைப் பற்றி விளக்கி, கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அரசாணையின்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இம்மாணவர் சேர்க்கையில் சிறப்பு கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதைப் பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்களையும் பள்ளி வாரியாக நடத்திடவும் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்துச் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது மற்றும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மதிய உணவு இடைவேளை முடிந்ததும் மாணவ மாணவிகளை சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது குறித்து வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.
வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் 6 முதல் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
உள்பட பல்வேறு நெறிமுறைகளை வழங்கப்பட்டுள்ளது.