டெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி தலைமையில் 10வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில், நாளை நடைபெற உள்ளது. நாளைய கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 23) காலை 9.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்பட முக்கிய நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ஸ்டாலின் சென்ற விமானம் இன்று மதியம் 1.15 மணியளவில் டெல்லி சென்றடைந்தது. விமான நிலையத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்களை திமுக தலைவர்எ டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லம் சென்றடைந்தார்.
தற்போது தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற உள்ளார். முன்னதாக, இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ கத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த உள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்துக்கான நிதியை போராடி பெறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்ற விவரம்:
முதல் கூட்டம்: 8 பிப்ரவரி 2015
இரண்டாவது கூட்டம்: 15 ஜூலை 2015
மூன்றாவது கூட்டம்: 23 ஏப்ரல் 2017
நான்காவது கூட்டம்: 17 ஜூன் 2018
ஐந்தாவது கூட்டம்: 15 ஜூன் 2019
ஆறாவது கூட்டம்: 20 பிப்ரவரி 2021
ஏழாவது கூட்டம்: 7 ஆகஸ்ட் 2022
எட்டுவது கூட்டம்: 27 மே 2023
ஒன்பதாவது கூட்டம் 27 ஜூலை 2024
10வது கூட்டம் 24 மே 2025.
Photo – Video: Credit ANI