விடங்கேஸ்வரர் திருக்கோயில், தில்லைவிடங்கன், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்

தல சிறப்பு :

இங்குள்ள விநாயகர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

பொது தகவல் :

பிரகாரத்தில் மேற்கில் பிள்ளையார், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையும், வடக்கில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். தேவகோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் எதிரே திருக்குளம் உள்ளது.

தலபெருமை :

இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவி தில்லை நாயகியின் பெயரும் இறைவன் விடங்கேஸ்வரர் பெயரும் இணைந்து இத்தலம் தில்லைவிடங்கன் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். கோயில் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் உள்ள பிரகாரத்தில் நந்தி பலிபீடம் இருக்க அடுத்துள்ள மகாமண்டபத்தின் கீழ் திசையில் சந்திரன் அருள்பாலிக்கிறார். மேற்கில் விநாயகர், பாலகிருஷ்ணன், பாலமுருகன் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் விடங்கேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலது புறம் அன்னை தில்லை நாயகியின் சன்னதி உள்ளது.

இங்குள்ள அம்மன் தில்லை நாயகி சுற்றுவட்டார கன்னிப் பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாகத் திகழ்கிறாள்.

தல வரலாறு :

சந்திரன் இறைவனை பூஜித்து அருள்பெற்ற தில்லை விடங்கன். சந்திரன் தலம் இது. இங்குள்ள கோயில் அருள்மிகு விடங்கேஸ்வரர் கோயில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விடங்கேஸ்வரர் இறைவி தில்லை நாயகி சில இடங்களில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர்களிலேயே ஊர் பெயர் அமைவதுண்டு. மயூரநாதர் அருள்பாலிக்கும் தலத்தின் பெயர் மயூரம். இது பின்னர் மாயவரம் என்றாகி தற்போது மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. வைத்தியநாத சுவாமி அருள்பாலிக்கும் தலம் வைத்தீஸ்வரன் கோயில் இப்படிப் பல தலங்கள் இருப்பினும் இறைவி இறைவன் பெயர்கள் இணைந்த தலத்தின் பெயர்கள் அமைவது மிக அபூர்வம்.

திருவிழா :

பிரதோஷங்கள், சித்திரை முதல் நாள், பொங்கல், மார்கழி 30 நாட்கள் சோம வாரங்கள் ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

பிரார்த்தனை :

திருமணம் ஆகாத பெண்கள் அன்னையிடம் விரைவில் தங்களுக்குத் திருமணமாக வேண்டும் என்றும் நல்ல கணவன் அமைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றனர். அவர்களது பிரார்த்தனையும் விரைந்து நிறைவேற அருள் புரிகிறாள் அன்னை.

நேர்த்திக்கடன் :

மணமான பின் தன் கண்கவர் கணவனுடன் அன்னையின் சன்னதிக்கு வரும் அந்தப் பெண்கள் அன்னைக்குத் தாலி வாங்கி அணிவித்து தங்களது நன்றிக் கடனை நெகிழ்ச்சியுடன் செலுத்துகின்றனர்.