சென்னை: வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை விண்வெளிக்கு பறந்த முதல் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர். இவர் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி 1, அன்று விண்வெளி சென்று திரும்பியபோது, கொலம்பியா விண்வெளி ஓடப் பேரழிவில் சிக்கி உயிரிழந்தார். அவரை கவுரவிக்கும் வகையில், அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா, வீர தீர செயல் புரியும் பெண்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப்பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வீரதீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும்.
இந்த நிலையில், நடப்பாண்டான, 2025 சுதந்திர தின விழாவில், கல்பனா சாவ்லா, விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான பெண்கள், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ்-2, ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும். பக்க எண்ணுடன் கூடிய உள்ளடக்க அட்டவணை, விண்ணப்பதாரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள், இணைப்பு – படிவம் 1 மற்றும் 2, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தைரியம் மற்றும் துணிச்சலுடன் மேற்கொண்ட அனுபவத்தை பற்றி ஒரு பக்கம் எழுத்து விளக்கம் மற்றும் படிவம் 1 மற்றும் 2 முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.