டெல்லி: நாடு முழுவதும்  முன்னுரிமை அடிப்படையில் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’ அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகம், பீகார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போஸ்கோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான புகார்களை விசாரித்து விரைவில் தண்டனை வழங்கும் வகையில்,  முன்னுரிமை அடிப்படையில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம் திரிவேதி மற்றும் பி.பி.வராலே  அமர்வு இதுதொடர்பாக  மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதில்,   “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க அதற்கான தனி நீதிமன்றங்கள் போதுமான அளவில் இல்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த வழக்குகளின் விசாரணையை முடித்து தீர்ப்பு அளித்துவிட வேண்டும்.

ஆதலால், மத்திய அரச அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுத்து, முன்னுரிமை அடிப்படையில் போதுமான அளவு போக்ஸோ நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். போக்ஸோ வழக்குகளை விசாரிக்கவும் தனி சிறப்பு அதிகாரிகளை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக விசாரிக்க சிற ப்பு நீதிமன்றங்களை முன்னுரிமை அடிப்படையில் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும்,  போக்ஸோ வழக்கைப் பொருத்தவரை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும், காலக்கெடுவுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து நிதி பெறும் பெரும்பகுதி மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்று, போக்ஸோ வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

தமிழகம், பீகார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போஸ்கோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.