சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலைவ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில், 1,867 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. அதைப்போல, 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 95.88% மாணவிகளும், 91.74% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் – 93.80% ஆக இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை விருதுநகர் – 97.45% மாவட்டமும், மூன்றாவது இடத்தை தூத்துக்குடி – 96.76% மாவட்டமும், நான்காவது இடத்தை கன்னியாகுமரி – 96.66% மாவட்டமும், 5வது இடத்தை திருச்சி – 96.61% மாவட்டமும் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 4,107 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இதில் சுமார் 9.10 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில் 4,57,525 ஆண்களும், 4,52,498 பெண்களும், ஒரு மாற்றுப் பாலினத்தவரும் அடங்குவர். மேலும், 28,827 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதினர்.
தேர்வு எழுதிய அனைவரும் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16, 2025 அன்று காலை 9:00 மணிக்கு வெளியானது. சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தேர்வு எழுதியவர்களில், 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி விகிதம் – 93.80 சதவீதம் ஆகும். 10ம் வகுப்பில் மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்விற்கு வருகைபுரியாதவர்கள்: 15,652பேர் ஆகும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் முடிவுகளை பின்வரும் இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் www.results.digilocker.gov.in , https://tnresults.nic.in/
அதைப்போலவே, மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு முடிவுகள் நேரடியாக SMS மூலம் அனுப்பப்படும். அப்படி இல்லை என்றால், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும். மைய மற்றும் கிளை நூலகங்களிலும் முடிவுகளை இலவசமாக பார்க்கலாம்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு ஜூலை 2, 2025 முதல் துணைத் தேர்வு (Supplementary Exam) நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

