சென்னை
இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத கட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2021ல் கரும்பு விவசாயி சின்னத்திலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சி உரிய நேரத்தில் விண்ணப்பிக்க தவறியதால் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தது.
தேர்தல் ஆணையம் அப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த கட்சி ஒன்றுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்தது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது,
ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அ[போது தங்களுக்கு புலி சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி விண்ணப்பித்தது. ஆனால் உயிருடன் இருக்கும் விலங்குகளை சின்னமாக ஒதுக்கீடு செய்யும் விதிமுறை இல்லை என்பதால், அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை.
எனவே 3 சின்னங்களை வரைந்து அவற்றை தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையம் இவற்றை பரிசீலித்து, அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்து அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால் நாம் தமிழர் கட்சி நீண்ட நாட்களாக கேட்ட விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.