சென்னை

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருவோருக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

வருகிற 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள “சித்திரை முழுநிலவு மாநாடு – 2025” கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இமாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை வெளியானதை தொடர்ந்து இம்மாநாட்டையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ளா 10 அறிவுரைகளில்,

1. சித்திரை முழுநிலவு பெருவிழாவிற்கு வருபவர்கள் வாகனங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ் பெற்றே மாநாட்டிற்கு வரவேண்டும். பாஸ் இல்லாத வாகனங்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

2. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலுக்கேற்ப அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். தடைசெய்யப்பட்ட வழித்தடங்களில் செல்லக்கூடாது.

3. குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலிருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ஈ.சி.ஆர். வழியாக மாநாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக வர வேண்டும்.

4.மாநாட்டிற்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

5. மாநாட்டிற்கு வருபவர்கள் வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதோ பொது இடங்களில் மது அருந்துவதோ கூடாது.

6. 11.05.2025-ம் தேதியோ அதற்கு முன்போ ஜோதி ஓட்டம் போன்ற நிகழ்வுகள் எங்கும் நடத்திட அனுமதி கிடையாது.

7. மாநாட்டிற்கு வாகனங்களில் வரும் நபர்கள் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி இறங்கினால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்பதால் வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே வாகனத்தை நிறுத்தி இறங்க வேண்டும்.

8. மாநாட்டுத் திடலுக்கு அருகாமையில் கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவம், கடல் நீரில் விபத்துக்களை தவிர்க்கவும் பங்கேற்பாளர்கள் மாநாட்டுத் திடலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது.

9. அன்றைய தினம் ஈ.சி.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனவே பொதுமக்கள் ஈ.சி.ஆர். சாலையில் பயணத்தை தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாமல்லபுரம் மற்றும் பிற சுற்றுலாத்தலங்களை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

10. அன்றைய தினம் திருவண்ணமலைக்கு பெருமளவில் வாகனம் போக்குவரத்து இருக்குமாதலால் ஜிஎஸ்டி (NH-45) சாலையிலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே சென்னையிலிருந்து மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பத்தூர், சேலம் வழித்தடத்தினையும் மறுமார்க்கத்தில் சேலம் திருப்பத்தூர், வேலூர் வழித்தடத்தினையும் பயன்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது. 

எனக் கூறப்பட்டுள்ளது.