சென்னை: பொறுப்புடன் பேச வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

சென்னை திமுக தலைமையகத்தில் இன்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. . கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அத்துடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கலந்துகொண்டனர். இதில், 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 2026 தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,” சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்” என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை செய்தார். மேலும், ” கேமராக்கள் நம்மை சுற்றி இருப்பதை அறிந்து, பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு தான் உள்ளது. அதனால், சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.