சென்னை: தமிழ்நாடு முழுவதும் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதாக  தகவல்கள் வெளியான  நிலையில், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் வெளியிட்டுள்ளது.

 2023ல் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளே, சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது.  அதன் அடிப்படையில்,  கடந்த ஆண்டை போல,  இந்த ஆண்டும் எந்தவித முன்னறிவிப்பு 6 சதவீதம் அளவுக்கு சொத்துவரிகள் உயர்த்தப்பட்டு  இருப்பதாக செய்திகள் பரவின. இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய அரசின் 15-வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம் சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்துவரி அரசாணை எண்.113, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்ஏ4) துறை, நாள் 5.9.2024-ன்படி 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை.

இந்த நிலையில், 3.5.2025 நாளிட்ட ஒரு நாளிதழில் “எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக” வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும்”.

இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.