சென்னை: 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு ,இன்று மீண்டும் கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கைவிவாதம் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, மார்ச் 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, புனித வெள்ளியையொட்டி ஏப்ரல் 18ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் சட்டப்பேரவைக்கும் விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில், 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணியளவில் தொடங்கும் கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளிக்கிறார். நிறைவாக தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.