சென்னை: தமிழ்நாட்டில் 10 முதல் 12ம் வகுப்பு வரையும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி பள்ளி மாணவர்களுக்கு ஆண்டிறுதி தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடுப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாம அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இன்றுடன் நிறைவுற்று கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தண்ணீர் அதிகம் பருகுங்கள். சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள். பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள்.
அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள். திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள். பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுகிறேன். மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோடை விடுமுறை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவ, மாணவிகள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். பெற்றோர்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியூர் செல்ல திட்டம் வகுத்திருப்பீர்கள்.
சிலர் அக்கம் பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரி குளங்களுக்கு சென்று ஜாலியாக விளையாடலாம் என்றும் திட்டமிட்டிருப்பீர்கள். இந்த நேரத்தில் தான் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கோடை விடுமுறை வர இருக்கும் நிலையில், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் துணி துவைக்கவும், குளிக்கவும் செல்லாத வகையில் பெற்றோர்கள் கண்காணித்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிப்பதையும், பாழடைந்த கிணறுகள், கைவிடப்பட்ட கற்குவாரிகள், ஆற்றுப்பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர், ஏரி, குளம், குட்டைகள், தடுப்பணைகள் ஆகிய பகுதிகளில் அதன் ஆழம் அறியாமல் குழந்தைகள் மேற்படி இடங்களுக்கு துணி துவைக்கவும், குளிக்கவும் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுறுத்தியும், மேற்கூறிய இடங்களில் குளிக்க செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், ஆங்காங்கே இருக்கும் பொதுமக்களும், இளைஞர்களும் தங்கள் கிராமப்புற பகுதியில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன், தீயணைப்புத் துறையினருக்கு (இலவச எண்: 101), காவல் துறையினருக்கு (இலவச எண்: 100), மருத்துவதுறையை அழைக்க (இலவச எண்: 108) என்ற 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் தேவையற்ற நடமாட்டத்தை தடுத்து எவ்வித அசம்பாவிதம் ஏற்படுவதை தடுத்திட பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளும் பெற்றோர்களும் கடைபிடிப்பது சிறந்தது ஆகும். கோடை விடுமுறையும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.