சென்னை: அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவல்துறையினர்  மேலும் 7 வழக்குகளில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்தது தொடர்பான 7 வழக்குகளில், ஞானசேகரனை சென்னை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில்.. அந்த ஆள் தனியாக செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார். இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ Sir ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் யார் அந்த சார் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையில்,  ஞானசேகரன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது. ஞானசேகரன் குறித்து போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஞானசேகரன் பூட்டி இருக்கும் வீடுகளை தொடர்ச்சியாக நோட்டமிட்டு ஜீப் மூலமாகவே சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதையும், அங்கு இருக்கக்கூடிய பெண்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது பள்ளிக்கரணை, அமைந்தகரை, மைலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது குறித்து விசாரித்த போது  இந்த தகவல்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையில்தான், ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது கொள்ளை வழக்கை விசாரித்துவந்த போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும், ஞானசேகரன் தொடர்ச்சியாக தனிமையில் இருந்த ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஞானசேகரன் இரண்டு செல்போன்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ள நிலையில் அதில் கடந்த ஆறு மாத கால் ஹிஸ்டரியை போலீசார் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சைபர் ஆய்வகத்தில் ஞானசேகரனின் செல்போன் கொடுத்து அதிலிருந்து ஆபாச வீடியோக்களை போலீசார் ரெக்கவரி செய்த நிலையில் வாட்ஸ் அப் சாட்டுகளையும் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “யார் அந்த சார்?” என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்தால் சந்தேகங்கள் தீர்க்கப்படும் என்ற அடிப்படையில் கால் ஹிஸ்டரியை எடுப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அதுகுறித்து காவல்துறை இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிட வில்லை.  ஞானசேகரனால்,   மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றவர்களுக்கு பகிரப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும்,  னசேகரன் கொள்ளையடித்த பணத்தில் பண்ணை வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்தும் விசாரணை நடைபெறுவதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்,  ஞானசேகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 7 இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அவரை அந்த 7 வழக்குகளிலும் கைது செய்துள்ளனர்.

அதன்படி,  கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்ததை போலீசாரிடம் ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனை தொடர்ந்து, 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனை கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.