சென்னை: அங்கன்வாடி மையங்களில் சேர்ந்து பயன்பெற்ற குழந்தைகள் அனைவரையும்  தொடக்க கல்வி பயில அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்  என  தமிழ்நாடு  தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார். இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கன்வாடி (Anganwadi)  மையங்கள்  என்பது மத்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ளமுதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் இம்மையங்கள் பொதுவாக பால்வாடி என்ற பெயரில் அறியப்படுகின்றன. தமிழகத்தில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, அரம்ப கால கல்வி கற்பதற்கான சூழல், குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இங்கு குழந்தைகளுக்கு சிறிது நேரம் படிப்பும் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த  அங்கன்வாடி மையங்களில் 5 வயது நிறைவு செய்து, தொடக்கப் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த  திட்டத்தை  தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2017 ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சான்றிதழைக்கொண்டு குழந்தையின் பெற்றோர்கள், தொடக்க கல்வி பயில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியும்.,

இந்த நிலையில்,   அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2025 முதல் தொடங்க வேண்டும். இதற்காக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து முதல் வகுப்போ பிற வகுப்புகளிலோ அரசுப் பள்ளிகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற வைக்க வேண்டும்.

2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.