திண்டுக்கல்: அமைச்சர் பெரியசாமியை சந்திக்க முயன்றி வழக்கறிஞர்மீது போலீசார் உதவியுடன் திமுகவினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, திண்டுக்கல்லில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறப்பணிப்பும் செய்துள்ளனர்.

அமைச்சர் பெரியசாமியை சந்திக்க முயன்ற வழக்கறிஞரை திமுகவினரும், காவல்துறையினரும் இணைந்து தாக்கிய நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு மற்ற வழக்கறிஞர்கள் குவிந்த நிலையில், இதையறிந்த அமைச்சர் இ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் எஸ்கேப் ஆகிவிட, வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் உதயகுமார். இவர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகம் அருகே வெட்டி போடப்பட்டுள்ள மரக்கிளைகளால், அருகே உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், பெற்றோர்கள் வாகனங்களை நிறுத்த இடையூறாக இருப்பதாகவும், அதனால் அதை அகற்றக்கோரி அருகே உள்ள திமுக அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு அமைச்சர் பெரியசாமி முகாமிட்டிருந்ததால், அவரை சந்திக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால், அவரை சந்திக்க அங்கிருந்த திமுகவினர் மற்றும் காவல்துறையினரும் மறுத்து, வழக்கறிஞர் உதயகுமாரை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர் பெரியசாமியின் ஆதரவாளர்களான திமுக வினர் காவல்துறையினர் உதவியுடன் வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உதயகுமார் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து, அவர் உடனே சக வக்கீல்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஏராளமான வக்கீல்கள் அங்கு திரண்டு தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பிரச்சினையான நிலையில், மாற்று பாதையில் அமைச்சர் பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் எஸ்கேப் ஆகிவிட்டார். இதையறிந்த வழக்கறிஞர்கள், திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையம் சென்று அதன்முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரம் செல்லச் செல்ல வக்கீல்கள் அதிகம் பேர் வரத்தொடங்கி போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதை கண்ட வக்கீல்கள் திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். வக்கீலை தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என கூறி இரவு 11 மணி வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. உறுதி அளித்தார். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்ட வழக்கறிஞர்கள் இன்று காலையிலும் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு குவிந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
இதனையடுத்து 7வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுபாஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருந்தபோதும் அதில் சமாதானம் அடையாத வக்கீல்கள் அவர்களை கைது செய்ய வேண்டும்.
அதுவரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன் திண்டுக்கல்லில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.