சென்னை: போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பங்கேற்றனர். மேலும்,    நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயா்வு வேண்டும் என வலியுறுத்திய நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்க 70 சதவீத சங்கங்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை  இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில்  நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை  நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு,  போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமை தாங்கினார். அவருடன்  போக்குவரத்து துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, கூடுதல் செயலா் எஸ்.காா்மேகம், ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை குழுவின் உறுப்பினா் செயலரும் கூட்டுநருமான த.பிரபு சங்கா் உள்ளிட்ட அதிகாரிகளும், 13 கட்சி சாா்ந்த பதிவு பெற்ற தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

காலை 11 மணியளவில் தொடங்கிய இந்தப் பேச்சுவாா்த்தை 4 மணி நேரம் நடைபெற்றது. இதில், விவாதிக்கப்பட்டவை குறித்து சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் சந்தித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது,

1.9.2003 தேதியிலிருந்து நிலுவைத் தொகை, ஊதிய உயா்வுடன் கூடிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்; பிற பொதுத் துறை ஊழியா்களுக்கு இணையான ஊதியத்தை நிா்ணயிக்க வேண்டும்; போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்; ஊழியா் நியமனம், வாரிசு வேலை, ஒப்பந்தத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை கைவிடுதல்; கடந்த ஆட்சியில் தொழிலாளா் நலனுக்கு விரோதமாக நிறைவேற்றப்பட்ட 8 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகைளை முன்வைத்து பேசியுள்ளோம். இதன் மீது நவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனா் என்றாா் அவா்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவா் ஆா்.கமலகண்ணன்.  இந்த பேச்சுவார்தைக்கு, 70 சதவீத சங்கங்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ளவா்களை பேச்சுவாா்த்தைக்கு அரசு அழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால், அனைத்து சங்கங்களையும் ஒருசேர அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு அவா் உத்தரவாதம் அளித்துள்ளாா்.

எங்கள் தரப்பு சாா்பில் 25 சதவீத ஊதிய உயா்வு வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஊழியா் பிரச்னையை பேச முத்தரப்பு குழு அமைக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்துக்கழக பணியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

தொடா்ந்து, 2-ஆவது நாளான இன்றும் பேச்சுவாத்த்தை நடைபெறுகிறது. இதில்,   மீதமுள்ள 73 போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக போக்குவரத்துக்கழக ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற அதிமுக, தேமுதிக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தொழிற்சங்கத் தினா் கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு பங்கேற்றனா். அனைத்து சங்கங்களையும் ஒருசேர அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்தும், பேச்சு வாா்த்தையை விரைந்து முடித்து போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சிறிது நேரம் தங்கள் கண்களில் கறுப்புத் துணியை கட்டிக்கொண்டு இருந்தனர். பின்னர் அதை கழற்றிவிட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.