சென்னை:  அண்ணா அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் சேகர்பாபு  பதிலடி கொடுத்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,. ஊழல் பெருச்சாளிகள் 2026ம் ஆண்டில் சிறைக்கு செல்வதை பார்ப்பேன் என்றும், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு திமுக அமைச்சர் சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் அர்எஸ் பாரதி உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதவர் எப்படி
செங்கல்லை பிடுங்க முடியும்,  திமுகவினரின் ஆலயமாக திகழ்கின்ற அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது,  அது இரும்புக்கோட்டை, அதன் காவலராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார், தமிழ்நாடு அரசியலை கரைத்து குடித்தவர்கள், அவரைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள்,   அவரது ஆணவ பேச்சுக்கு தமிழக மக்கள் 2026ம் ஆண்டு தேர்தலில் மிருக பலத்தோடு திமுக வெற்றி பெற்று பதிலடி தருவார்கள், முதலில் அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தன்னை சட்டமன்ற உறுப்பினராக நிலை நிறுத்தமுயற்சி செய்ய வேண்டும்  என்றும் பதிலடி கொடுத்தார்.

அதுபோல,  “அண்ணா அறிவாலயத்தில் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது; தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்பது கற்பனை” என்று சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

முன்னதாக, சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில்  பேசிய அண்ணாமலை,  புதிதாக கட்சி தொடங்கிய ஒருவருக்கு ஜிஎஸ்டி குறித்தும் பட்ஜெட் குறித்தும் தெரியவில்லை என தெரிவித்தார். பட்ஜெட் பற்றி தெரியாமல் குழந்தைகள் பிரிவு வைத்துக்கொண்டு மாற்றத்தை கொடுக்க கட்சி தொடங்கியுள்ளதாகவும் அவர் சாடினார்.

ஊழல் பெருச்சாளிகள் 2026ம் ஆண்டில் சிறைக்கு செல்வதை பார்ப்பேன் என்றும், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என்றும் அவர் கூறினார்.

டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் தமிழக முதல்வருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கேள்வி எழுப்பிய அண்ணாமலை பணம் கொடுத்து அரிடாபட்டியில் தனக்கு தானே பாராட்டு கூட்டத்தை நடத்தி கொள்வதாக கூறினார்.

தமிழகம் போடும் பட்ஜெட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டம் நடத்தியதில்லை என்றும், ஆனால் மத்திய அரசின் போட்ட பட்ஜெட்டுக்கு திமுக பட்ஜெட் கூட்டம் நடத்துவதாக சாடினார். இதன் மூலம் மத்திய பட்ஜெட் சிறப்பானது என தெரியவந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், தமிழகம் சார்பாகச் சென்றிருக்கும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவராவது, தமிழகத்துக்கோ, தங்கள் தொகுதிக்கோ எதுவும் கேட்பதில்லை. தமிழகத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத, அல்லது, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து வெளி வந்திருக்கும் ASER அறிக்கையில், நமது மாணவர்களுக்கு, தாய்மொழியான தமிழையே எழுதப் படிக்கத் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுதான், திமுக தமிழ் வளர்த்த லட்சணம். இன்னும் எத்தனை நாட்களுக்கு, பிரிவினை பேசி மக்களை ஏமாற்றுவார் கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.