சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பேரணி நடைபெற்றது. இறுதியில் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் 56வது  நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், மறைந்த அண்ணாவின் 56-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த பேரணியில், முதலமைச்சர் ஸ்டாலினுடன்,   துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்பட அமைச்சர்கள், திமுகவினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த  அமைதி பேரணி  அண்ணாசாலையில் உள்ள  பேரறிஞர் அண்ணா சிலை (வாலாஜா சாலை)  அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது.  இதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

. அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க.வினர் அமைதிப் பேரணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியார் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் செல்ல அனுமதியில்லை. கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.   கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, ராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது. வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை – திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியதை முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”

தந்தை பெரியாரின் புகழொளியையும் – அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!

நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.