சென்னை: காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யாமல் இருப்பதை கடுமையாக விமர்சனம் செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் உள்துறை செயலாளர் இன்று ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு தொடர்பான வழக்கில், காவல்துறை முறையாக செயல்படாத நிலையில், உயர்நீதிமன்றம் தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சமீப காலமாக தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. பல ஐபிஎஸ்-கள், மக்கள் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டா மல், அரசியல்வாதிகள் போல செயல்பட தொடங்கி உள்ளனர். இதனால் பல்வேறு வழக்குகளின் விசாரணைகள் முடங்கி கிடக்கின்றன. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2015ம்ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2015 ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல என்றும், தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை எனவும், காவல்துறையினரின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறி வருவதாகவும் விமர்சித்தார்.
காவல்துறையினரின் மெத்தனம் காரணமாக, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுவதாகவும், நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.
வழக்குப்பதிவு செய்யக் கோரியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது, காவல்துறையினர் விதிமுறைக ளை பின்பற்றுவதில்லை என்பதை காட்டுவதாக நீதிபதி குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து விமர்சித்தவர், காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து, காவல்துறையை நிர்வகித்து வரும் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளருக்கு தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அவர் நாளைய (இன்றைய) விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.