சென்னை: புதுக்கோட்டையைச் சேர்ந்த கனிமவள கொள்ளையார்களால் கொலை செய்யப்பட்ட  சமூக ஆர்வலர் ஜெகபர் அலி  லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால், அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம், மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்தில் மீண்டும் புகார் கொடுத்துவிட்டு, இனிமேல் மக்களை கூட்டித்தான் போராட்டம் நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  ஜனவரி  17ஆம் தேதி ஜெகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் டிப்பர்  லாரி ஒன்றால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜெகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர்.  இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகளும் பெரிதாக்கின.

இதனைத் தொடர்ந்து  காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன்படி, ஜெகபர் அலி திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஆர்.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு அவரது மகன் சதீஷ், ராமையா, ராசுவின் டிப்பர் லாரி வைத்துள்ள நண்பர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் காசி ஆகிய 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான ராமையாவை தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் தான் ஜெகபர் அலி கொலை வழக்கை விசாரித்து வந்த புதுக்கோட்டை போலீசார் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.