சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீடு, கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற ரெய்டு மற்றும் பணம் பறிமுதல் எதிரொலியாக, இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த்தின் கல்லூரியிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாள்கள் சோதனையில் ஈடுபட்டனர். எம்பி கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான கல்லூரியில் ரூ. 13.7 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்ததாகவும் கல்லூரியில் உள்ள லாக்கரை உடைத்து ரொக்க பணம் ரூ. 75 லட்சத்தை பறிமுதல் செய்ததாகவும் முக்கிய ஆவணங்களின் ஆதரவான பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தது உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைக்கு கதிர் ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை முன்னதாக சம்மன் அனுப்பியிருந்தது இந்நிலையில், இதனை ஏற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜரானார்.

முன்னதாக, திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு, வேலூர் அருகேயுள்ள காட்பாடி காந்தி நகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும், கதிர் ஆனந்தின் அறக்கட்டளை சார்பில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜனவரி 3-ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
இதில், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் உள்ள நிர்வாக அலுவலகம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் கட்டிடத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
சோதனையின் முடிவில் அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கம்யூட்டரில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்கங்கள், சொத்து தொடர்பான பத்திரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து அமலாக்கத் துறை சார்பில் அதிகாரப்பூவமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், கதிர் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இநத் நிலையில், கதிர் ஆனந்த் விசாரணைக்காக இன்று (ஜன. 22) சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.
கடப்பாறையால் உடைக்கப்பட்ட கதவுகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு..