ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 5ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், இன்றுடன் வேட்புமனு நிறைவடைய உள்ளது. இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகிறது. இந்த நிலையில், இன்று நாதக வேட்பாளர் சீதாலட்சுமி தனியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில், மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து தேசிய ஜனாயக கூட்டணி பாஜக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்தது.

இந்த நிலையில், திமுக-வின் சந்திரகுமாரும், நாதக-வின் சீதாலட்சுமியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். திமுக வேட்பாளர் சந்திரகுமாரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறர்.
இந்த தொகுதியில், கடந்த 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை 9 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது. வரும் 20ஆம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீத்தாலட்சுமி, நாங்கள் மூன்று நாட்களுக்கு முன்பே உறவினர்களுடன் நடந்து சென்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கேட்டிருந் தோம். ஆனால், அதற்கு அனுமதி இல்லை என்று காலைதான் பதில் அளித்தனர். இதனால், தனியாக சென்று மனு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறினார்.