விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில்  நடைபெற உள்ள நிலையில், விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் கட்சியான  தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில்  இன்று  (அக்டோபர் 27)  பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,  விக்கிரவாண்டி பகுதிக்கு பல ஆயிரம் வாகனங்கள்  வரும் என்பதால்,  தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து, விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள், தென் தமிழகத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களுக்காக போக்குவரத்து வழிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கார்கள் திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லும் வகையிலும்,

திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும்,

திருச்சியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.