சென்னை:  தண்டையார்பேட்டை குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்துள்ள  1700 ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற  தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உளளது.

தண்டையார்பேட்டை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் உள்ள 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளாக அகற்றாதது ஏன்  என தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம், அந்த ஆக்கிரமிப்புகளை  8 வார காலத்துக்குள்  அப்புறப்படுத்த  உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தூயமூர்த்தி என்பவர்,  தண்டையார்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் அனுமதியின்றி ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகள்  உள்ளதாகவும், ஏராளமான கட்டுமானங்களும் நடைபெற்று வருவதாகவும், அதை உடனே அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை,  தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அதில்,   ‘கடந்த 2022-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தப் பகுதியில் 1,700 ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் புதிதாக குடியிருப்புகள் கட்ட திட்டமிட்ட போதும், அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்ய மறுத்து வருவதால், அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் விரைவில் அகற்றப்படும்’ என தெரிவித்திருந்தார்.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சுப்புராஜ் ஆஜரானார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வழக்கறிஞர் பி.பாலாஜி; அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகினர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சிதிலமடைந்த கட்டடங்கள் என்பதால், அவற்றை இடித்து விட்டு மீண்டும் கட்டும் திட்டம் இருந்ததால், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடியவில்லை என்றும், குடியிருப்புவாசிகள் காலி செய்ய மறுத்ததால், திட்டம் அமலுக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. வாரியத்தின் மனுவைப் பார்க்கும்போது, ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதியாகிறது. அருகில் உள்ள இடங்களை, குடியிருப்பவர்கள் ஆக்கிரமித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 2022ல், 1,700 ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. தற்போது எந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. 2022 பிப்ரவரியிலேயே ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரிந்தும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது, கடமை தவறியது மட்டுமின்றி, அலட்சிய தன்மையையும் காட்டுகிறது.

எனவே, ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உடனடியாக, அதிகாரிகள் செயல்பட வேண்டும். எட்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய எண்ணிக்கையில் போலீசாரை பணியமர்த்தி, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் உறுதி செய்வதற்கு, மாநகர போலீஸ் ஆணையர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.