சென்னை:  சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 160 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக  தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்புகள் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் நடைபெற்ற தேசிய ஆயுர்வேத தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டு கட்டுரை மலரை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,   “எதிர்காலத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகள் பயன்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக இந்த மாநாடு அமையும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் கலந்துகொண்ட எதிர்கால மருத்துவம் என்ற மாநாடு 3 நாட்கள் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக அமைந்துள்ளது.

இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேத மருத்துவம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மத்திய அரசு இதற்கென ஒரு துறையையே வைத்துள்ளது. ஆயுஷ் – ஆயுர்வேதா (Ayush- Ayuverthaa), யோகா (yoga), யுனானி (Unani), சித்தா (Siddha), ஹோமியோபதி (Homeopathy) என்பதை ஒருங்கிணைத்து ஒரு துறையே உள்ளது.

  இதில் மத்திய அரசு சித்தா என்பதற்கு பதிலாக இமாசலப்பிரதேசம், சிக்கிம் பகுதிகளில் உள்ள செளரிக்பாய் என்ற மருத்துவத்தில் உள்ள ‘எஸ்’ என்பதை சேர்த்தது. அதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதில் சித்தா இடம்பெற வேண்டும் என தெரிவித்தோம். அதனைத் தொடரந்து சித்தா என்பதுடன், செளரிக்பாய் மருத்துவத்தையும் சேர்த்து AYUSSH என வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வைத்துள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் அனுமதி கிடைத்த உடன் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்” என்று அகூறினார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசும்போது,   “தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் சார்பில் 9வது தேசிய ஆயுர்வேதா தினத்தை முன்னிட்டு, உலகளாவிய ஆயுர்வேத புதுமைகள் மற்றும் ஒருங்கிணைப்பு என்னும் தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து 2 விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு பேச உள்ளார்கள்.

 இம்மாநாட்டில் பங்கேற்பதற்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவத்துறைகள் தொடர்ந்து கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சிகளை பெற்று வருகிறது.

ஆயுர்வேதா மருத்துவத்துவத்தைப் பொறுத்தவரை அதற்கென்று மருத்துவக் கல்லூரி நாகர்கோவில் பகுதியில் உள்ள கோட்டார் பகுதியில் அமைந்துள்ளது. அம்மருத்துவமனையில் 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும், ரசசாஸ்திரம், திரவியகுணம் என்கின்ற இரண்டு பாடப்பிரிவுகளின் கீழ் தலா 5 இடங்களை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரியின் வளர்ச்சிக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 மேலும் இந்த மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 150 ஆராய்ச்சி கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு புத்தகமாக இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் அறிவித்ததற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை என்பது அவர்களது ஆட்சிக் காலத்திலும் அங்கேயே தான் இருந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் செய்திருக்கும் பணிகளை கூறுகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் ஆர்ப்பாட்டத்திற்கு யாரையோ அனுப்புவதற்கு பதிலாக இந்த மருத்துவமனைக்கு நேரிடையாக சென்று கடந்த 3 ஆண்டுகளில் என்னென்ன பணிகளை செய்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்து தெரிந்துக் கொள்ளலாம்.

 கடந்த 10 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் நீங்கள் என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். அதுவரை அது வட்டார அரசு மருத்துவமனையாக தான் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டது மட்டுமல்லாமல் 2023 ஜனவரி மாதம் 27ஆம் தேதி மருத்துவமனைக்கு நேரிடையாக சென்று 4.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் மற்றும் பன்முக தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தினை திறந்து வைத்திருக்கிறேன். நிரந்தர செவிலியர்கள் 49 பேர், தற்காலிக செவிலியர்கள் 39 பேர் என 88 செவிலியர்கள் அங்கே பணியில் இருந்து கொண்டிருக்கின்றனர். இதர பணியாளர்கள் 43 பேர் பணியில் இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் புற ஆதார முறையில் 69 பணியாளர்கள் அங்கே பணிபுரிந்து வருகின்றனர். எனவே இம்மருத்துவமனையில் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கிறது. இத்தனை வசதிகள் செய்திருக்கிறோம். இதனை எல்லாம் ஆய்வு செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

இளநிலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்புவதற்கு ஏதுவாக கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. அன்னை மருத்துவக் கல்லூரியில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் 50 இடங்கள் உள்ளன. அதனை நிரப்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுமதிக்கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வைப்பு நிதி இடத்தில் சேர்ந்து விட்டால் மீண்டும் திருப்பித் தரப்படும்.

கிண்டியில் உள்ள  கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் ஒராண்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு   மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 160 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை துவக்கப்பட்ட குறுகிய காலத்தில் மருத்துவப்படிப்பு துவங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது. பிற மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகளை பொறுத்து துவக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.