மதுரை: தோல்வியை கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி ஓடினால் சாதனையாளராக மாறலாம் என கொடைக்கானல்  அன்னை தெரசா பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய  ஆளுநர் ரவி கூறினார். இந்த பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார்.

கவர்னருடன் நல்லிணக்கத்துடன் செயல்படுவதாக  கூறி வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் , கடந்த சில கல்லுரிகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் கலந்துகொண்டார். ஆனால், ஆளுநர் நிகழ்ச்சியில் நடைபெற்ற  தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த இரு பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர், இன்று 3வது முறையாக தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார்:

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில்  31-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரான  கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி,   397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலைக்கழகம் மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என மொத்தம் 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவுத்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின் கல்லூரி   மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பேசும்போது,   தோல்வியை கண்டு துவளாமல் பின் வாங்கிச் செல்லாமல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதனையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் சாதனையாளராக ஜொலிக்க முடியும். வெற்றிக்கு முதல் காரணமாக மாணவர்கள் நேர மேலாண்மை , கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இயற்பியல் பாடத்தை இயற்கை மற்றும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.

எனது வெற்றிக்கு முதல் காரணம் என் தாயின் அறிவுரைகள் தான். எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலும் அதற்கு பிறகும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உங்களுடைய இலக்கு உயர்வானதாக இருந்தால் உங்கள் பள்ளிக்கும், உங்கள் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித் தரும்.

இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய எக்சாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

முன்னதாக கொடைக்கானல் வந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை இங்குள்ள சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன்  நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பள்ளி முதல்வர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். செயலாளர் சந்திரமவுலி கவர்னருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து பொருளாளர் ராமசுப்பிரமணியம், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசு வழங்கினார்.